Aug 29, 2011

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்



 அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார்.

புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு குறுகிய மூளைக்குள் அடங்கி இருப்பதும் அதை மோடி மற்ற மாநிலங்களுக்கு தர மறுப்பது பற்றியும் பதிவு செய்திருக்கிறார். தமிழ் நாட்டில் வாழ்ந்த கான மயிலும், சிவிங்கப் புலியும் இன்று முற்றிலும் அழிந்து விட்ட செய்தி எத்தனை பேருக்கு தெரியும்?


அமராவதி ஆற்றில் வாழ்ந்த மயில் கெண்டை என்ற மீன் இனம் முற்றிலும் அழிந்து விட்ட செய்தி மிகவும் துயரப்படுத்தியது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நதி இன்று வறண்டு போய்க் கிடக்கிறது. திரு.தியடோர் அவர்களின் சிறு வயதில் அமராவதி எப்படி இருந்தது என்பதை வாசிக்கும் போது, நாம் எப்படிப்பட்ட ஒரு ஆற்றை இழந்திருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது. குளங்களையும் ஏரிகளையும் ஆழப்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்காமல், நாடு முழுவதும் அணைகள் கட்டி, இன்று ஆறுகளும் வீணாகி, ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சீரழிந்து வருவதை பதிவு செய்திருக்கிறார்.


பழனி மலை தொடர்ச்சியில் இருந்த குறிஞ்சி செடிகளின் வாழ்விடங்கள் சிதைக்கப்ட்டு இன்று அவை ஒரு குறுகிய இடத்துக்குள் இருப்பதை பற்ற்யும் கவலை தெரிவிக்கிறார். நம் வீடுகளை சுற்றி இருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஆறுகள் இணைக்கப்படுவதால்  ஏற்படும் அபாயங்களையும் சுட்டிக் காட்டுகிறார். கங்கை எப்படி உருவாகிறது (இமயமலையின் பனிச் சிகரங்களில்), காவிரியும் வைகையும் (மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மற்றும் நீரை தன்னுள் தக்கவைத்து ஆண்டு முழுவதும் நீரை வெளிவிடும் அடர்ந்த காடு)  எப்படி உருவாகிறது என்ற புரிதல் இருந்தாலே நம்மால் அதன் விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.


இயற்கைக்காக இது வரை பாடுபட்டவர்களை பற்றியும் இந்த நூலில் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. திரு.ஜே.சி.குமரப்பா, மா.கிருஷ்ணன், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (இந்திய காங்கிரசை தோற்றுவித்தவர் என்ற செய்தி மட்டுமே பல வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவர் பறவைகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் பெயர்களை பதிவு செய்தவர் என்ற செய்தியை இந்த நூலில் தான் முதல் முறையாக படித்தேன்), பி.கே.மேத்யூ, ழான் ழியோனோ போன்றவர்களின் பணிகளையும் சிறப்பாக எழுதியுள்ளார்.


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக மட்டும் இல்லை இந்த நூல். இன்றைய தலைமுறையும் கூட இயற்கையில் இழந்தவற்றையும் , இழந்து வருவது பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.

திண்ணை இணைய இதழில் வெளியானது.. 


Aug 22, 2011

அழியும் பேருயிர் - யானைகள் : திரு.ச.முகமது அலி & க.யோகானந்த்






"அழியும் பேருயிர் : யானைகள்" என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன.


ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.


"மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.



வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்" என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.


யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.


மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.


பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்...


https://crownest.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/


Aug 18, 2011

நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 2 )



திப்பு சுல்தான் உருவாக்கியிருந்த சிறைச்சாலையை பார்க்க நேர்ந்தது. இன்று அது ஒரு காட்சிப்பொருள் மட்டுமே. அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிறைச்சாலையின் மேல் தளத்தில் இருந்து காவிரியாற்றை  ரசித்துக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த தென்னை மரங்களில் கிளிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. காவிரியின் பரந்த அழகை அங்கிருந்து ரசிக்க முடிந்தது.

சம்மர் மஹால். திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டதை சித்திரங்களாக பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லா சுவர்களிலும்  போர்  சித்திரங்கள் . திப்பு தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேயருடன் போரிட்டிருக்கிறார். எத்தனையோ குறுநில மன்னர்கள் ஆங்கிலேயரின் படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாமல்  சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் திப்புவின் வீரமும்  நம்பிக்கையும்  நிச்சயம் பாராட்டுக்குரியது. திப்பு அணிந்திருந்த உடைகளை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை. ஆடையின் சில பகுதிகள் கிழிந்திருந்தன. அந்த ஆடைகளுக்கு திப்புவின் நினைவுகள் மிச்சமிருக்குமா? வரலாற்றின் சாட்சியங்களே வரலாற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறதோ என்று தோன்றியது. திப்புவின் தேகத்தை மூடியிருந்த ஆடை திப்புவின் மூச்சுக்காற்றை எத்தனை முறை உணர்ந்திருக்கும்.

ரங்கநாத சுவாமி கோவிலுக்கு அந்த ஊரின் தெருக்கள் வழியாக நடந்து சென்றேன். இருநூறு வருடங்கள் கடந்த பழமையான வீடுகளும், அருகிலேயே புத்தம் புதிய வீடுகளும் மாறி மாறி இருந்தன. பசு மாடுகளின் போக்குவரத்தும், சாலைகளில் ஆங்காங்கே சாணமும் கிராமத்தை உணர வைத்தது. பெண்கள் மாலை நேரங்களில் தங்கள் வீட்டுத் திண்ணையிலோ படிகளிலோ அமர்ந்து பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருதனர். தமிழ் நாட்டில் தான் கிராமங்களில் கூட பெண்கள் சின்னத் திரையின் நெடுந் தொடர்களுக்குள் மூழ்கிப் போனது வருத்தமாக இருந்தது. திண்ணைகள் எவ்வளவு அற்புதமான இடம். மாலை நேரங்களில் திண்ணைகள் உயிர்ப் பெறுகின்றன. ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகள் கட்டப்படுவதே இல்லை.

கோவிலின் வெளியே குதிரை சவாரிக்காக நிறைய குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. திப்புவின் ஆட்சியில் குதிரை படையே இருந்தது. இன்றும் குதிரைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு முற்றிலும் மாறிப் போய்விட்டது. கோவிலை நோக்கி செல்லும் அந்த சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ஒரு காலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரைகள் இன்று வாகனங்களுக்கு வழி விட்டு சவாரிக்காக காத்துக்கொண்டிருந்ததன. எல்லா ஊர்க் கோவிலையும் போல அங்கும் காவி உடையில் சாமியார்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றிலும் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து பிரிந்த ஓடை கோவிலின் அருகே ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் கரையில் சிறிது தூரம் நடந்து சென்றேன். ஓடையின் இரு புறமும் கருங்கற்கலாக இருந்தன. மனிதர்களின் நடமாற்றம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. கற்களின் ஊடாக ஓடை எழுப்புகிற ஓசை மட்டுமே அந்த பகுதியில் நிறைந்திருந்தது. அடர்ந்த புதர்களும் மரங்களும் அந்த பகுதியை பசுமை கொள்ளச் செய்தன. ஒரு பாறையின் மேல் பெரிய சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். நானும் சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓடையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பாறையின் அருகில் பச்சை நிறத்தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. கற்களின் மீது மோதி சுழன்றடித்த படி தண்ணீர் ஓடிக் கொண்டே ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தது. தண்ணீரின் மொழி இதுதானோ எனத் தோன்றியது. நீரின் போக்கை பொருத்து ஒலியும் மாறுபடும் எனில் தண்ணீரின் மொழியை அதன் கரைகளே முடிவு செய்யும் போலும்.

கோவிலின் வெளிப் பிரகாரம் அகலமானதாக இருந்தது. பழமையான கல் சுவரின் ஊடாக நிறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கோவிலை கட்டும் போது, கால மாற்றம் கோவிலின் ஊடாக மின்சாரத்தை பாய்ச்சும் என யாரேனும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

கோவிலில் இருந்து சற்று தொலைவில் படித்துறை இருந்தது. இரவு மெல்ல கசியத் தொடங்கியது. படியில் அமர்ந்துகொண்டு ஆற்றை கவனித்து வந்தேன். ஆற்றின் மறு கரையில் இருந்த மரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. ஆற்றின் போக்குக்கு இணையாக வௌவால்கள் பறக்கத்தொடங்கின. அவை கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. இத்தனை வௌவால்கள் கூட்டமாக பறப்பதை இங்குதான் பார்க்க நேர்ந்தது. பின் நாளில் கோவையிலும் மாலை நேரங்களில் இது போல வௌவால்கள் கூட்டமாக பறப்பதை பார்த்திருக்கிறேன். ஆறு இருளை விழுங்கத் தொடங்கியது. மனிதர்கள் நடமாட்டம் குறையவே ஆற்றின் பேரிரைச்சல் அதிகமானது. மனிதர்கள் உறங்கும் போது இயற்கை பேசத் தொடங்கிவிடும் போல. அல்லது இயற்கையின் பேச்சை மனிதர்கள் கேட்பதில்லையா? ஆறு எப்போதும் போல ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆறு ஒரு போதும் உறங்குவதில்லை. அதன் உறக்கத்தை மழையே முடிவு செய்கிறது. ஆனால் ஆற்றின் மரணத்தை மனிதன் முடிவு செய்கிறான். இரவு நேரங்களில் ஆற்றில் இறங்க பயமாக இருக்கிறது. அதுவே ஆற்றின் பலமாகவும் இருக்கக் கூடும்.

மறுநாள் விடிந்தவுடன் அதே இடத்திற்கு வந்தேன். ஆற்றில் நிறைய பேர் குளித்துக்  கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோரையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோருடைய கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருந்தது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் குழந்தைகளாகிப் போனார்கள். ஆனாலும் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஏன் யாரும் மெனக் கெடுவதில்லை? ஆறு இவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள் ஆகிவிடுமோ என பயமாகவும் இருந்தது. ஆற்றை கடக்கும் ரயிலின் படிகளில் நின்றபடி ஆற்றை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பயணிகள். ரங்கன்திட்டு பறவைகளில் ஒன்றிரண்டு ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தது. நான் ஆற்றில் இறங்கினேன். ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் நடுவில் வந்தமர்ந்த கொக்கு மீண்டும் பறக்கத் தொடங்கியது. நான் ஆற்று நீரில் மூழ்கியிருந்தேன்.



Aug 17, 2011

நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 1 )

 2011 ஜூலை மாதம் இளைஞர் முழக்கம் இதழில் வெளியானது.



ஸ்ரீரங்கபட்டணம், காவிரி உருவாக்கி வைத்த அற்புத தீவு. திப்பு சுல்தான் தன் அரசாங்கத்தை இந்த ஊரை தலைமையிடமாகக் கொண்டு அமைத்திருந்தார். நூற்றாண்டுகளை கடந்த பழமையும், நவீனமும் ஒரே புள்ளியில் சந்திக்கிற தீவு. ஊரின் வடமேற்கில் காவிரி இரண்டாக பிரிந்து மீண்டும் இணைகிறாள். நகரம் முழுக்க இடிந்து போன கோட்டைச் சுவர்களால் நிரம்பி இருக்கிறது. ஊரின் எந்த திசையில் சென்றாலும் கோட்டை சுவர்களின் மிச்சம் தென்படுகிறது. தன் தலைநகரை சுற்றி கோட்டைகள் அமைத்து, நடுவில் தன்னுடைய அரண்மனையை அமைத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்று வரை இந்த ஊர் மிகப்பெரிய சாட்சி. ஊரை சுற்றி ஓடுகிற காவிரி நகரை எப்போதும் குளிர்ச்சியுறச் செய்கிறது. மிகப் பழமையான ஊர் என்ற போதிலும் கிராமத்து மனமே அதிகம் வீசுகிறது. ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கிறது. கிளிகளின் சத்தம் மனதை லேசாக்குகிறது.

ஸ்ரீரங்கபட்டினத்தின் வடமேற்கில் காவிரியின் மணல் திட்டுகளில் மையம் கொண்டிருக்கிறது ரங்கன்திட்டு பறவைகள் சரணலாயம். பல வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. காவிரியின் பரப்பை பறவைகள் மேலும் அழகாக்குகின்றன.

காவிரி ஆற்றில் படகில் சென்று கொண்டே பறவைகளை அருகில் சென்று காண முடிகிறது. பறவைகள் மனிதர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக பறவையின் அருகில் சென்றாலே அவை பயந்து பறந்துவிடுவது, மனதில் அவமானத்தை கீறிச் செல்வது போல இருக்கும். ஆனால் ரங்கன்திட்டு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. பறவைகள் பயம் கொள்ளவில்லை. ஆற்றில் இறங்கி நம்மை சீண்ட மாட்டார்கள் என உணர்ந்திருக்குமா  எனத் தெரியவில்லை.

படகுகளுக்கு இணையாக ஆற்றில் முதலைகள் நீந்திக் கொண்டு வந்தன. ஆனால் என்னுடன் படகில் பயணித்த யாரும் முதலைகளை கண்டு அச்சம் கொள்ளவில்லை. முதலைகளை ஒரு ஆச்சர்யப் பொருளாகவே பார்த்தார்கள். முதலை பண்ணைகளில் அவற்றை ஒரு சடப்பொருள் போல பார்த்து பழகியவர்களுக்கு முதலையின் இயல்பான ஆக்ரோஷம் புரியாமல் இருப்பது வியப்பாக இருந்தது.

காவிரிக் கரையோர மரங்களில் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு தூக்கணாங் குருவிக் கூடுகள் போலவே இருந்தன. பகல் பொழுதில் அசைவற்று இருப்பதால் அவை வௌவால்கள்  என்று உணரவே முடியாமல் இருந்தன. அரிதாக ஒன்றிரண்டு வௌவால்கள் இடமாற்றம் அடைந்தது. பறவைகளை போல வௌவால்கள் ரசிக்கப்படுவதில்லை. ஆனால் உண்மையில் மரங்களின் உற்பத்திக்கு அவை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது.

நான் படகு இல்லம் அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் என் அருகில் வந்து அமர்ந்தார். அவரின் உதவியாளர்கள் நான்கு பேரும் உடன் வந்து அமர்ந்தார்கள். பறவைகளை பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்திருப்பதாக சொன்னார். பறவைகள் ஆங்காங்கே மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு பறவைகள் மட்டுமே பறக்கவும், பின் மீண்டும் மரங்களில் அமரவுமாக இருந்தன. ஒளிப்பதிவு செய்ய வந்தவருக்கு அது அழகாக தெரியவில்லை. தன் உதவியாளரிடம் கற்களை கொண்டுவரும்படி சொன்னான். தன்னுடைய ஒளிப்பதிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பறவைகளின் மீது கல் எறிகிறானே  என ஆதங்கமாக இருந்தது.

நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவன் உதவியாளரிடம் மேலும் கற்கள் வேண்டுமென்றான். பறவைகளின் கூட்டம் நோக்கி தன்னிடமிருத கல் ஒன்றை எறிந்தான். அது பறவைகளை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே ஆற்று நீரில் விழுந்தது. மீண்டும் ஒரு முயற்சி செய்தான். அதுவும் நீருக்குள் விழுந்து மூழ்கிப் போனது. பறவைகள் பயம் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கற்களோடு சேர்ந்து அவன் எண்ணமும் ஆற்று நீரில் மூழ்கிப்போனது. ஆனால் கரையில் இன்னமும் கற்கள் மீதம் இருக்கின்றன. பறவைகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் சாட்சிகளாகக் கிடந்தன கற்கள்.



 தொடரும்...

Aug 8, 2011

Sprint of the Blackbuck: Edited by Mr.S.Theodre Baskaran


 

Blackbuck என்ற காட்டுயிர் இதழில் வெளியான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன். பல்வேறு வன ஆர்வலர்களாலும் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் தென்னிந்திய காடுகள் பற்றிய அரிய தகவல்களை தருகிறது, Sprint of the BlackBuck.
பல்வேறு விலங்கினங்கள், பறவைகள், இரு வாழ்விகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.


மேலும் எல்லா உயிரினங்களின் உயிரியல் (Binomial Name) பெயரோடும் எழுதப்பட்டுள்ளது. காடுகளில் மட்டும் அல்லாது நம்மை சுற்றியே வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது. உயிரினங்களின் கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள், உயிரினங்களை மீட்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், வனப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பல்வேறு தளங்களில் எழுதப்பட்டுள்ளது.


1950 களில் இந்தியா காடுகளில் வாழ்ந்த சிவிங்கப்புலிகள் (இன்று முடிலும் அழிந்து விட்டது) வெளிமான்களை வேட்டையாடப் பழக்கப்படுத்தப்பட்ட செய்திகள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. பண்ணைகளில் இருந்த முதலைகளை ஆற்றில் விடப்பட்ட அனுபவங்கள், ஓசூர் அருகே சிறுத்தை புலி ஊருக்குள் புகுந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்த நூல்.




Aug 6, 2011

செந்தலைக் கிளி



நான் என் நண்பருடன் பழனி மலை பகுதியிலுள்ள பெத்தேல்புரம் (ஓட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் வழி)  வனப்பகுதியில் பறவைகளை பார்ப்பதற்காக  நாள் முழுக்க நடந்து சென்று மாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது கூட்டம் கூட்டமாக செந்தலை கிளிகளை பார்க்க முடிந்தது. ஆனால் அது Plum Headed Parakeet ஆக இருக்குமா  அல்லது Blossom Headed Parakeet ஆக இருக்குமா என சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த அற்புதமான பறவையை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சம் உள்நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

எங்களுக்கு முன்னால் தனியாக பிரிந்து சென்ற நண்பர் என் கைப்பேசியில் அழைத்து சொன்னார். "அங்கிருந்து நகர்ந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு அருகில் யானைகள் நின்று கொண்டிருக்கின்றன". அங்கிருந்து வெளியே வந்து பார்த்த போது தான் தெரிந்தது, எங்களுக்கு வெகு அருகில் ஒரு யானை கூட்டம் நின்று கொண்டிருந்தது. அதில் ஆண் யானையும் குட்டியும் அடக்கம்.

யானைகள் நின்றிருந்தது கூட கவனிக்க முடியாத அளவில் அந்த பறவை எங்களை ஈர்த்திருந்தது. உடல் பச்சையாகவும் தலை மட்டும் சிவப்பாகவும் இருக்கும். பழனி மலை வனப் பகுதிகளில் இதனை வேறு எங்கும் நான் பார்த்தது கிடையாது.


Aug 1, 2011

எமர்ஜென்சி நடந்தது என்ன? வி.கிருஷ்ணா ஆனந்த்




எமர்ஜென்சி எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும், எமர்ஜென்சியின் போது நடந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்ட ராஜ் நாராயண் தொடுத்த வழக்கும் அதற்கான தீர்ப்பும் இந்திரா காந்தியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.


அதிலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் அவர் எடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்தங்களை தன் தேவைக்கு ஏற்றார்போல மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் செய்திகளை தணிக்கை செய்தது அரசு.


பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் பல பத்திரிக்கைகள் மக்கள் புரிந்து கொள்வதற்காக எதுவும் எழுதாமல் சில பத்திகளை காலியாக விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற எண்ணற்ற கைதுகளும், அதன் விளைவாக உருவான அரசியல் குழப்பங்களும் இன்றைய தலைமுறை நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றே.