Oct 30, 2016

கோவையில் யானைகள் இரு(ற)ந்தன - கவிதை




வலசை தொலைத்த பேருயிர் ஒன்று 
வயிற்றில் குட்டியோடு
சாலையின் நடுவே நிற்கிறது.

ஒலிப்பான்களின் இரைச்சலில் மிரட்சியுற்று 
ஓடி வரும் பேருயிர் பின்னர் 
ரயில் பாதையில் நடக்கிறது.

இதற்கு முன் பார்த்திராத ரயிலை 
எதிர்கொண்டு நகர்கையில் புரிந்து கொள்ளவியலா 
மனதுடன் தப்பித்து ஓடுகிறது.

சீமைக் கருவேலக் காட்டில் 
உணவின்றி நீரின்றி அலைந்து பின்  
மின்வேலியில் மோதி திக்கற்று நிற்கிறது.

பசித்த வயிறோடு வயலுக்குள் நுழைந்த போது 
கொழுத்தி எறியப்பட்ட பட்டாசு 
அதன் நெற்றியில் பட்டு வெடிக்கிறது.

ஊருக்கு வெளியில் இருக்கும் குப்பை மேட்டில்
உணவை தேடத் தொடங்கியது பேருயிர்.

ஞெகிழிப் பைகளை உணவென்று நினைத்து விழுங்கும் பேருயிர் 
வயிற்றில் இருக்கும் குட்டிக்கு விஷத்தை 
ஊட்டிக் கொண்டிருந்தது..

தொலைவில் நின்று பேசிக்கொண்டார்கள்
"சரியான திருட்டு யானை"
நல்ல வேலையாக அது குட்டியின் காதுகளில் 
ஒரு போதும் விழப் போவதில்லை...



2 comments:

  1. வனம் செய்யும் யானையை வதை செய்யாதீர்கள். கவிதை அற்புதம்

    ReplyDelete