Jun 4, 2017

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்: உங்கள் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை நீட்டிக்க விரும்பினால், உங்களால் இயன்ற சிறு முயற்சிகளை செய்யலாம்.

#1 : மின்சிக்கனம், தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், எரிபொருள் சிக்கனம், உணவை வீணாக்காமல் இருத்தல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நம் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை இன்னும் சிறிது காலம் நீட்டிக்கலாம்.

#2 : பொது போக்குவரத்தை பயன்படுத்துதல். ஒரே இடத்திற்கு செல்பவர்கள் வாகனத்தை பகிர்ந்து கொள்ளுதல். சிக்னலில் காத்திருக்கும் போது வாகனத்தை நிறுத்தி இயக்காதிருத்தல்.

#3 : கடைக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து பை எடுத்துச் செல்லும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இல்லை. பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம். வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச் செல்வோம்.

#4 : வீட்டிலேயே மக்கும் பொருட்களை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதும், அவற்றை பயன்படுத்தி செடிகள் வளர்ப்பதும் அவசியம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை தருவது சூழலை காக்க மறைமுகமாக உதவும்.

#5 : செடி வளர்க்கும் ஆர்வத்தையும், பறவைகளை பார்க்கும் ஆர்வத்தையும் குழந்தைகளிடம் விதைத்தல். இயற்கையை நேசிக்கவும் அதை பாதுகாக்கவும் கற்றுக்கொடுத்தல்.

#6 : புதிதாக மரக்கன்றுகள் நடுவதைவிடவும் மிக முக்கியமானது இருக்கும் மரங்களை பாதுகாத்தல். நம்முடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படும் போது கேள்வி எழுப்புதல் ஒவ்வொருவரின் கடமை.

#7 : பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதன் மூலம், காற்று மாசுபடுவதை தவிர்க்கலாம். ஒலி மாசையும் (Noise Pollution) தவிர்க்கலாம். காகிதக் குப்பைகளையும் தவிர்க்கலாம்.

#8 : வாகனங்களில் செல்லும் போது தேவையற்ற முறையில் ஒலிப்பான்கள் (Horn) பயன்படுத்துவதை குறைக்கலாம். காற்று மாசுபடுவதை போலவே ஒலி மாசுவும் (Noise Pollution) ஆபத்தானது. மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. சிக்னலில் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது Horn பயன்படுத்துவது முட்டாள்தனம்.

#9 : உணவகங்களுக்கு செல்லும்போதும் பயணங்களின் போதும், தண்ணீரை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லலாம். பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகள் மண்ணில் விழுவது குறையும்.

#10 : குரோட்டன்ஸ் போன்ற அழகு (?) தாவரங்களுக்கு பதிலாக நாட்டுச்செடிகளை வீட்டில் வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகும். பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும். .

No comments:

Post a Comment