என்னைப் பற்றி

பழனி என்னுடைய சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்சமயம் சிங்கப்பூர் .



சிறுவயது முதலே விலங்குகள், பறவைகள் மீது அதிகம் ஈர்ப்பு உடையவனாகவே இருந்திருக்கிறேன். இயற்கையின் மீதான பற்றுதலை இன்று வரை இறுகப் பற்றி இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான தொடர் முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து மென் பொருள் துறையில் தொடர்ந்து பணியாற்றுவேனா என்பது தெரியாது. ஆனால் வாழ்நாள் முழுவதும் இயற்கைக்காக நிச்சயம் குரல் கொடுப்பவனாகவே இருக்க விரும்புகிறேன். 


என்னுடைய முதல் கவிதை தொகுப்பு, "சிதறாத எழுத்துக்கள்", எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் 03.10.2010 அன்று பெங்களூரு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இயற்கை தொடர்பான செய்திகளை என்னுடைய வலைப்பூ (இவண் சதீஸ் / writersatheesh) மூலமாகவும், மற்ற பிற ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். என்னுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கையை சுற்றியே இயங்குகிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்பதே என் எழுத்தின் மையக் கருவாக எப்போதும் இருக்கிறது. என்னுடைய இரண்டாவது புத்தகம் "யாருக்கானது பூமி?". காட்டுயிர் தொடர்பான கட்டுரை தொகுப்பை என் அனுபவங்கள் மூலமாக எழுதியிருக்கிறேன். இந்த நூலுக்கு, தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் 2014-15 -ஆம்  ஆண்டின் சிறந்த சுற்றுச் சூழல் விருது வழங்கியுள்ளது.  என்னுடய மூன்றாவது நூல் "தூவி".



யாருக்கானது பூமி ? (2015)

கர்நாடக வனப்பகுதிகளை உள்ளடக்கிய விரிவான கட்டுரைத் தொகுப்பு. பறவைகளை மையப்படுத்திய கட்டுரைகள் பழனிமலைத் தொடர், சென்னை, ஐரோப்பா என விரிகிறது. 

தூவி (2022)

“பறவைகளின் உயிர்சூழல்” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல். 

பல்லுயிர்களுக்கானது பூமி (2023)

இயற்கை வரலாறு,  பழனிமலைத் தொடரின் சூழலியல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு என விரிவாக பேசும் நூல், சிங்கப்பூரின் இயற்கை வளத்தையும் விவரிக்கிறது.


எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் நான் அதிகம் விரும்பும் எழுத்தாளர். யானையின் பிரம்மாண்டத்தை  விடவும் எறும்பை வியந்து எழுதுபவர். திரு.தியடோர் பாஸ்கரன் நான் விரும்பும் சூழலியல் எழுத்தாளர். சுற்றுச்சூழல் என்பது தனக்கு முற்றிலும் தொடர்பில்லாதது என்று நினைப்பவர்களின் மனதில், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் சூழலை சார்ந்தே உள்ளது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். Wildlife Conservation Group of Palani Hills என்ற அமைப்பை தொடங்கி நண்பர்களில் ஒத்துழைப்புடன் பழனி மலைகள் பாதுகாப்பிற்காக முயற்சிகள் செய்து வருகிறேன். அமைதியான வனம் ஒன்றில், ஒரு புலியின் உறுமல் எப்படி அதிர்வை ஏற்படுத்துமோ, அதே போன்றதொரு அதிர்வை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தும் முனைப்பில் நான் எழுத்துக்களை கோர்த்துக்கொண்டிருக்கிறேன்.

--
பா.சதீஸ் முத்து கோபால்