Dec 4, 2016

தமிழ் சினிமாவில் காட்டுயிர்


எல்லா பிரச்சனைகளுக்கும் சினிமாவையும் நடிகர்களையும் உள்ளே இழுப்பது அவசியம் இல்லைதான். ஆனால் அந்த சினிமா தவறான தகவல்களை தரும் போது விமர்சனம் செய்வது அவசியமாகிறது. காட்டுயிர்கள் விஷயத்தில் தமிழ் சினிமா இதுவரை எதையுமே உருப்படியாக செய்யவில்லை என்பது தான் உண்மை. மாறாக, அது தவறான தகவல்களை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. பாம்பு பால் குடிக்கும் என்பதில் தொடங்கி புலியை கொடூர விலங்காக சித்தரித்தது வரை காட்டுயிர் மீதான அறிவியல் பார்வையிலிருந்து முற்றிலும் விலகி மக்களிடம் அறியாமையை ஏற்படுத்தி வருகிறது. 

சிவாஜி திரைப்படத்தில் ரஜினி "சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என சொன்னதும், சிங்கம் படத்தில், "பாத்ததெல்லாம் திங்கற ஓநாய் இல்ல" என சூர்யா சொல்வதும் காட்டுயிர் மீதான அடிப்படை புரிதலும், அக்கறையும் தமிழ் சினிமாவுக்கு இன்னமும் இல்லை என்பதற்கான உதாரணங்கள். வெறும் அடுக்கு மொழி வசனங்களுக்காக காட்டுயிர் மீதான குழப்பத்தை மக்கள் மனதில் தொடந்து தமிழ் சினிமா உண்டாக்கி வருகிறது. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தில் சத்யராஜை வேட்டைக்காரனாக காட்டியிருப்பதோடு, அது ஏதோ வீரத்தனம் என காட்சிப்படுத்துவதும் காட்டுயிர்களை கேலிப்பொருளாக்குகிறது. "இது நாடு அல்ல, புலிகள் வாழும் காடு" என ரெட் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடலின் பொருள் என்ன? புலியை கொடூரமான விலங்கு என எச்சிரிக்கிறாரா? கும்கி திரைப்படத்தில் காட்டு யானையை ஒரு கொடூரவிலங்கு போலவே சித்தரித்தது கொடுமையின் உச்சம். படத்தின் இறுதி வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் ஒரு சில வசனங்களும் காட்சிமைப்புகளும் குறைந்தபட்ச நம்பிக்கையை தருகின்றன. கபாலி திரைப்படத்தில் வரும் வசனம் அர்த்தம் நிறைந்தது. "பறவையின் குணம் பறப்பது தான், அதை பறக்க விடு" என்பது ஆறுதலாக இருந்தது. கூடுதலாக அடுத்த காட்சியிலேயே வில்லனாக காட்டப்படும் ஒருவன் "ஓராங்குட்டான்" (Orangutan) குரங்குகளை விலைபேசிக் கொண்டிருப்பான். தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா மற்றும்  இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட இவை தற்போது அழியும் நிலையில் உள்ளன. இதற்கு முன்பு  சினிமாவில் ஓராங்குட்டான் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கூடுதலாக இது போன்ற காட்சி அமைப்புகள் அவசியம். புதுச்சேரியில் ரஜினியை வில்லன் ஆட்கள் கொல்ல வரும் போது பின்னணி இசையை நிறுத்திவிட்டு, ஆள்காட்டிக் குருவியின் ஒலியை சேர்த்து நேர்த்தி. இது யாருடைய எண்ணம் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பாபநாசம் திரைப்படத்தில் வரும் ஒரு வசனமும் முக்கியமானது. "யான போற பாதையில வாழ போட்டா அது திங்காம என்ன பண்ணும்?" என்ற வசனத்தின் மூலம், யானையின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதை சொல்வார் கமல். இது போன்ற மிகச் சில காட்சிகளை தாண்டி தமிழ் சினிமாவில் காட்டுயிர் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. 





தமிழ் வில்லன்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்துபவர்களாகவே உள்ளனர். உலக அளவில் போதைப்பொருட்களுக்கு அடுத்ததாக, சட்ட விரோதமாக கடத்தப்படுவது விலங்குகளின் உறுப்புகள் தான். ஆனால் அது குறித்து இதுவரை தமிழ் சினிமா காட்டியிருப்பதாக தெரியவில்லை. புலியின் தோல், யானை தந்தம், காண்டாமிருகத்தின் கொம்பு என சட்ட விரோதமமாக பல காட்டுயிர்கள் கொல்லப்பட்டு அதன் உடல் பாகங்கள் கடத்தப்படுகின்றன. தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு போலீஸ் அதிகரிகளாகவே வருவார்கள்? ஒரு நேர்மையான திறமையான வனத்துறை அதிகாரிகள் எல்லாம் திரைக்கதையில் இருப்பதில்லை ஏன் ?

சிங்கம், புலி, சிறுத்தை, கழுகு, குருவி, குள்ளநரிக்கூட்டம், உடும்பன், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மைனா, பாயும் புலி, வேங்கை என காட்டுயிர் பேர்களைக் கொண்டு பல திரைப்படங்கள் வந்தாலும், இதுவரை எந்த திரைப்படமாவது சூழலில் அவற்றின் அவசியம் குறித்து பேசியிருக்கிறதா? காட்டுயிரின் அவசியம் குறித்தோ, சூழலின் முக்கியத்துவம் குறித்தோ பேசாத திரைப்படங்கள், தலைப்புக்கு மட்டும் அவற்றை பயன்படுத்துவது நியாயமா? 









No comments:

Post a Comment