May 23, 2020

இந்திய நாயினங்கள் (ஒரு வரலாற்று பார்வை) : திரு.தியடோர் பாஸ்கரன்


திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் இந்திய நாயினங்கள் (ஒரு வரலாற்று பார்வை).

இந்திய நாயினங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த புத்தகம் இது. இந்தியாவில் காணப்படும் பல்வேறு நாயினங்கள் பற்றிய விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது. இந்தியா என்ற பரந்த நிலப்பரப்பில் சூழலுக்கு ஏற்றவாறு காணப்படும் வெவேறு வகையான நாயினங்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். நாய்கள் எப்போது மனிதர்களிடம் சேர்ந்து வாழத் தொடங்கியது, நாய்கள் குறித்து நம்மிடம் இருக்கும் வரலாற்று தகவல்கள், நாய்கள் பற்றிய சிற்பங்கள், ஓவியங்கள், நடுகற்கள் என பலவற்றையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

Add caption


 இமாலய மாஸ்டிஃப், போட்டியா, கூச்சி, புல்லிகுட்டா, கோம்பை, சிந்தி, பக்கர்வால், பட்டி, பட்டி பாட்டியா, பண்டிக்கொண்டா, ஜோனங்கி போன்ற பயன்பாட்டு நாயினங்கள் பற்றியும், லாசா அப்சோ, திபெத்திய ஸ்பானியல், திபெத்திய டெரியர் போன்ற துணை நாயினங்கள் பற்றியும், அலக்னூரி, கன்னி, பஞ்சாரா, காரவான், குருமலை, முதோல், கைக்காடி, சிப்பிப்பாறை, பஷ்மி, ராம்பூர், ராஜபாளையம், வாகாரி முதலான வேட்டை நாயினங்கள் பற்றியும் விரிவாகதன் அனுபங்களோடு இணைத்து எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நாயினங்கள் பெரும்பாலும் பயன்பாட்டுக்காகவும் வேட்டைக்காகவும் வளர்க்கப்பட்டுள்ளன என்பதை இந்நூல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு அந்நிய நாயினங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாய்கள் இந்தியாவில் செல்ல பிராணியாக மாறியதையும், அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாய்களுக்கு ஆங்கிலப்பெயர்கள் வைக்கப்படுவதையும் விளக்கியிருக்கிறார். 

திருக்குறளில் நாய்கள் பற்றிய குறிப்பேதும் இல்லை என்பது ஆச்சர்யமூட்டும் செய்தியாக இருந்தது.

இந்த நூலில் தெருநாய்கள் பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமானது. மேலும் தெரு நாய்களால் (பொறுப்பாளர்கள் யாரும் அற்ற நாய்களால் ) காட்டுயிர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். அருகி வரும் பல்வேறு உயிரினங்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுவது குறித்தும், காட்டுயிர்களுக்கு தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஹோலே காட்டில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிக்காக சென்ற போது காட்டில் ஒரு நாயை பார்த்து மிகவும் ஆச்சர்யமடைந்தோம். சோழிங்கநல்லூர்  சதுப்புநிலத்தில் பறவைகள் நாய்களால் துரத்தப்படுவதையும் பார்த்திருக்கிறேன். பிரம்மகிரி காட்டில் வேட்டைத்தடுப்பு முகாமில் ஒரு நாயை பார்த்தேன். அருகில் எந்த ஊரும் இல்லை என்றபோதும் வேட்டை தடுப்பு காவலர்களால் அங்கு நாய் வளர்க்கப்பட்டது. இந்த நூலை வாசிக்கும் போது இவையாவும் எனக்கு நினைவுக்கு வந்தது.

நாய்கள் அதன் பொறுப்பாளர்களால் வளர்க்கப்படும் வரை பிரச்சனை இல்லை என்பதையும், கணக்கின்றி பெருகும் தெரு நாய்கள் சுற்றுச் சூழலுக்கும், காட்டுயிர்களுக்கும் ஆபத்தாக மாறி இருக்கிறது என்பதையும் இந்த புத்தகம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. 

நாய்கள் மீது அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

இந்த நூலை வாங்க விரும்புகிறவர்கள் காக்கைக்கூடு மூலம் பெற்றுக்கொள்ளலாம் :



6 comments:

  1. மிக அருமை சதீஸ் புத்தக விமர்சனம்

    ReplyDelete
  2. கிராமப்புறங்களில் அதிகமதிகம் இருந்த இத்தகைய நாட்டு நாய்கள் நாளடைவில் காணாமல் போனது ஏன் என்று இன்றுவரையில் நம்மை சிந்திக்க விடாமல் வெவ்வேறு பல புதிய யுக்திகளை கையாண்டு நம்மை பலிகடாவாக ஆக்கிவரும் மேலையாதிக்கமும், காலச்சூழலும் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும் காலப்போக்கில் உண்மை வெளியுலகிற்கு வந்தே தீரும். தோழர் சதீஸ் அவர்களின் சரியான புத்தக விமர்சனம் நம்மை புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்கும் எண்ணத்தை தூண்டுகிறது. காலத்தின் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த நூலினை நிச்சயம் வாங்கிவிடுவேன். நன்றியுடன்
    ராஜா முகம்மது.

    ReplyDelete
  3. Arumai 😍👌🏽👌🏽👌🏽👌🏽

    ReplyDelete